தேசிய அறிவியல் விருது தேசிய வளர்ச்சிக்கான அறிவியல் சிறப்பு பெறுவதற்கும், தொழில்நுட்பத் தலைமையை வளர்க்கும் பொருட்டும் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சகம்,அணு சக்தி, விண்வெளி,சுற்றுச்சூழல்,தொழில்நுட்ப புதுமை உள்ளிட்ட 13 அறிவியல் தொடர்பான துறைகளில் சிறந்த பங்களிப்புக்கு மிக உயர்ந்த அங்கீகாரமாக நான்கு வகையான 'ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் என்கிற தேசிய அறிவியல் விருதுகளை வழங்குகிறது. அறிவியல் துறைகளைச் சேர்ந்த 24 பேர் நான்கு வகையான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை ஐஐடி பேராசிரியர்கள் தலப்பில் பிரதீப், மோகன சங்கர் சிவப்பிரகாசம், ஸ்வேதா பிரேம் அகர்வால் ஆகிய 3 பேர் தேசிய அறிவியல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சென்னை ஐஐடி-யின் ரசாயனத் துறை பேராசிரியர் தலப்பில் பிரதீப் 'விஞ்ஞான் ஸ்ரீ விருதை பெற்றுள்ளார். இவர் மூலக்கூறு தொகுப்பு ஆராய்ச்சிகளில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டவர் என்பதுடன், குறைந்த செலவில் நிலையான நீர்சுத்திகரிப்பு அமைப்புகளுக்கு வழிவகுத்தமைக்காக கௌரவிக்கப்பட்டுள்ளார். சென்னை ஐஐடி சுகாதார தொழில்நுட்ப புத்தாக்க மைய தலைவரும் மின் பொறியியல் துறை பேராசிரியருமான மோகன சங்கர் சிவப்பிரகாசம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைப் பேராசிரியர் ஸ்வேதா பிரேம் அகர்வால் ஆகியோர் 'விஞ்ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்நாகர்' விரு துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுகாதார தொழில்நுட்பங்களில் குறைந்த செலவிலான மருத்து சாதனங்கள், மனித மூளை இமேஜிங்3டி -தெளிவுத்திறனுடன் படம் தொழில் நுட்பங்கள் உருவாக்கம், சிறந்த ஆராய்ச்சி மையங்களை நிறுவியது உள்ளிட்ட வகையில் மோகன சங்கர் சிவப்பிரகாசம் கௌரவிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ஸ்வேதா பிரேம் அகர்வால், கிரிப்டோகிராஃபி துறையில் தனது முன்னோடி ஆராய்ச்சிப் பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். தமிழக விஞ்ஞானி : இவர்களைத் தவிர விருது பெற்றவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி கே.தங்கராஜு, உயிரியல் அறிவியலுக்கான நீண்டகால பங்களிப்புகளுக்காக விஞ்ஞான் ஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார். இவர் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சிலின் பல்வேறு பிரிவுகளிலும், ஹைதராபாத் டிஎன்ஏ கைரேகை மற்றும் ஆய்ந்தறிதல் மையத்திலும் பொறுப்பேற்றிருந்தவர்.

