குஜராத் - பொது சிவில் சட்டம் பின்னணி: குஜராத் மாநிலம், உத்தரகாண்டுக்கு பிறகு பொது சிவில் சட்டம் 2026-ஐ நிறைவேற்றிய இரண்டாவது மாநிலமாகியுள்ளது. மாநில சட்டமன்றம் அங்கீகரித்த இந்தச் சட்டம், மதம் பாராமல் திருமணம், விவாகர்த்து, வாரிசுரிமை மற்றும் சேர்ந்து வாழும் உறவுகளை ஒரே சட்டக் கட்டமைப்பில் ஒழுங்குபடுத்துகிறது. பொது சிவில் சட்டம் பற்றி மதம், சாதி, நம்பிக்கை, பாலினம் அல்லது பாலின ஈர்ப்பு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து தனிநபர்களுக்கும் சமமாகப் பொருந்தக்கூடிய ஒரே மாதிரியான பொதுவான சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம், மதம் சார்ந்த தனிநபர் சட்டங்களை மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு இந்திய அரசியலமைப்பின் சரத்து 44 , இந்தியா முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஒரு பொது சிவில் சட்டத்தை உருவாக்க அரசு முயல வேண்டும் என்று வழிகாட்டுகிறது. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை ஆகியவை இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் UCC-யின் தற்போதைய நிலை இந்தியாவில் தற்போது நாடு தழுவிய அளவில் பொது சிவில் சட்டம் நடைமுறையில் இல்லை. சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை (UCC) நடைமுறைப்படுத்திய முதல் மாநிலம் உத்தரகாண்ட் ஆகும். 1867-ஆம் ஆண்டின் போர்த்துகீசிய சிவில் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு பொதுவான சிவில் சட்ட முறையை கோவா பின்பற்றி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு ஷா பானு (1985) மற்றும் சரளா முட்கல் (1995) போன்ற வழக்குகளில், இந்திய உச்ச நீதிமன்றம் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. ஷயாரா பானு எதிர் இந்திய யூனியன், 2017 வழக்கில் முத்தலாக் நடைமுறை அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அது இஸ்லாமிய பெண்களின் கண்ணியத்தையும் சமத்துவத்தையும் மீறுவதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 21வது இந்திய சட்ட ஆணையம் (2018) 2018-ஆம் ஆண்டில், 21வது இந்திய சட்ட ஆணையம், இந்த நிலையில் பொது சிவில் சட்டம் என்பது "அவசியமானதும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல" என்று கூறியது. மேலும், பாலின நீதியை (Gender Justice) உறுதி செய்வதற்காகத் தனிநபர் சட்டங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அது பரிந்துரைத்தது.

