நீதிபதிகள் விசாரணைக்குழு
- சூழல்: நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான புகார்கள் குறித்த தனது அறிக்கையை நீதிபதிகள் விசாரணைக்குழு, மக்களவை சபாநாயகரிடம் சமர்ப்பித்தது.
- நீதிபதிகளின் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கான சட்டப் கட்டமைப்பை வழங்கும், நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968-இன் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட்டது.
- இப்புகார்களை ஆய்வு செய்வதற்காக 2025 ஆகஸ்ட் 12 அன்று மக்களவை சபாநாயகரால் இந்தக்குழு அமைக்கப்பட்டது.
- சட்டப்பூர்வ நடைமுறைகளின்படி இந்த அறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்படும்.
நீதிபதிகள் பதவி நீக்கம் பற்றி
-
- நீதிபதிகள் “பதவி நீக்கம்” என்பது, நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது செயலற்ற தன்மைக்காக உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான முறையான நடைமுறையைக் குறிக்கிறது.
- இது அரசியல் தலையீடுகளைத் தவிர்த்து, அதே நேரத்தில் நீதித்துறையின் பொறுப்புணர்வை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதற்கான சட்டக் கட்டமைப்பு இந்திய அரசியலமைப்பின் 124(4) மற்றும் 218 ஆகிய சரத்துகளுடன், ‘நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968’-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ” பதவி நீக்கம் ” என்ற வார்த்தை அரசியலமைப்பில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை.
- பதவி நீக்கத்திற்கான காரணங்களில் “நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை” மற்றும் “செயலற்ற தன்மை” ஆகியவை அடங்கும்.
- இந்த நடைமுறை நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையில் தீர்மானத்துடன் தொடங்குகிறது. இதற்கு மக்களவையின் 100 எம்பிக்கள் அல்லது மாநிலங்களவையின் 50 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படுகிறது, மேலும் இதனை சபாநாயகர் அல்லது தலைவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- விசாரணைக் குழு: தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், 1968 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது. இதில் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி (அல்லது தலைமை நீதிபதி), ஓர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஒரு சிறந்த சட்ட அறிஞர் ஆகியோர் இடம்பெறுவார்கள்.
- நாடாளுமன்ற ஒப்புதலும் குடியரசுத் தலைவர் ஆணையும்: இக்குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்; குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, இரு அவைகளிலும் “சிறப்பு பெரும்பான்மை” மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் தொடர்ச்சியாகக் குடியரசுத் தலைவர் பதவி நீக்க உத்தரவைப் பிறப்பிப்பார்.
மண்டல மன்றம்
- சூழல் : சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நடைபெறும் மத்திய மண்டல மன்றக் கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் தலைமை தாங்குவார்.
- இக்கூட்டத்தில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொள்வார்கள்.
மண்டல மன்றங்கள் பற்றி
- மொழிப் பகைமைகளைக் களைவதற்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் 1956-ல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் முன்மொழியப்பட்டது.
- சட்ட அடிப்படை: 1956-ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், சட்டப்பூர்வமான (அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட) ஆலோசனைக் குழுக்களாக நிறுவப்பட்டது.
- நோக்கம்: பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒருங்கிணைப்பை வளர்ப்பது.
- தன்மை: இது வெறும் கலந்தாலோசனை மற்றும் ஆலோசனை சார்ந்தது, பரிந்துரைகள் கட்டுப்படுத்தக்கூடியவை அல்ல.
- தலைவர்: மத்திய உள்துறை அமைச்சர் (அனைத்து மண்டல மன்றங்களுக்கும் பொதுவான தலைவர்).
- துணைத் தலைவர்: ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள், ஓராண்டுக்கு சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்.
உறுப்பினர்கள்
- மண்டலத்திலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் முதலமைச்சர்கள் மற்றும் இரண்டு அமைச்சர்கள்.
- மண்டலத்திலுள்ள யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள்.
- நிதி ஆயோக் பிரதிநிதி, தலைமைச் செயலாளர்கள் மற்றும் வளர்ச்சி ஆணையர்கள் ஆலோசகர்களாக (வாக்களிக்கும் உரிமை இன்றி).
- நிலைக் குழுக்கள்: உறுப்பு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து, முக்கியக் கூட்டங்களுக்குத் தயாராகின்றனர்.
ஆறு மண்டல மன்றங்கள்
மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956-இன் கீழ்
- வடக்கு மண்டல மன்றம்; மத்திய மண்டல மன்றம்; கிழக்கு மண்டல மன்றம்; மேற்கு மண்டல மன்றம்; தெற்கு மண்டல மன்றம் ஆகியவை அமைக்கப்பட்டன.
வடகிழக்கு மன்றச் சட்டம், 1972-இன் கீழ்.
- வடகிழக்கு மன்றம் அமைக்கப்பட்டது.

