தேசியத் திட்டங்கள்

NHAI ஆரோக்ய வனம் (Arogya Van)

  • பின்னணி: தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள காலியான நிலப்பகுதிகளில், மருத்துவ மரங்களை நடுவதற்காக ‘ஆரோக்ய வனம்’ என்ற முன்னெடுப்பை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மேற்கொண்டுள்ளது.
  • இந்த முயற்சியானது, மகரந்தச் சேர்க்கையாளர்கள் , பறவைகள் மற்றும் நுண்ணுயிரிகளுக்குத் தேவையான மருத்துவ மர வகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், தேசிய நெடுஞ்சாலைகளில் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் அமைப்பின் மீள்தன்மையை வலுப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நோக்கங்கள்

  • மண் வளம் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்.
  • மகரந்தச் சேர்க்கையாளர்கள், பறவைகள் மற்றும் நுண்ணுயிரிகளுக்கு ஆதரவளித்தல்.
  • மருத்துவ தாவரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • காலநிலை மாற்றத்தைத் தாங்கும் திறனை வலுப்படுத்துதல்.

மர வகைகள்

  • சுமார் 36 வகையான மருத்துவத் தாவரங்கள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • உதாரணங்கள்: வேம்பு, நெல்லி, நாவல், புளி, எலுமிச்சை, அத்தி (Gular), மகிழம் (Maulsari).
  • இவை அந்தந்தப் பகுதியின் காலநிலைத் தகுதியைப் பொறுத்துத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

முக்கியத்துவம்

  • ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்கிறது.
  • உள்நாட்டு மருத்துவத் தாவரங்களைப் பாதுகாக்கிறது.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் பசுமை வழித்தடங்களை உருவாக்குகிறது.

 

மண் தோழிகள் முன்முயற்சி (Soil Sakhis Initiative )

    • பின்னணி: மேற்கு மகாராஷ்டிராவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் “மண் தோழிகள்” (Soil Sakhis) திட்டம், விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, மண்ணின் தரத்தை உயர்த்தி விவசாய உற்பத்தியையும் பெருக்கி வருகிறது.
    • தொடக்கம் (2023): வேளாண்மை மற்றும் காலநிலை நடவடிக்கை திட்டத்தின் கீழ் மான் தேசி அறக்கட்டளையால் (Mann Deshi Foundation) தொடங்கப்பட்டது.
    • செயல்படுத்தப்படும் பகுதிகள்: மகாராஷ்டிராவின் வறட்சிக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களான சதாரா, சாங்லி, சோலாப்பூர், கோலாப்பூர் மற்றும் புனே.
  • கோட்பாடு: கிராமப்புறப் பெண்களுக்கு மண்ணைப் பரிசோதிக்கவும், விவசாயிகளுக்கு வழிகாட்டவும் பயிற்சி அளித்து அவர்களை ‘மண் தோழிகளாக’ உருவாக்குதல்.

மண் தோழிகளின் பங்கு

  • மண் மாதிரிகளைச் சேகரித்தல்.
  • ஆய்வகப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல்.
  • விவசாயிகளுக்கு அறிவியல் ரீதியான மண் ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகளை வழங்குதல்.

வருமானம்

  • மாத ஊதியம்: 8,000–10,000 + பெட்ரோல் படி.
  • மண் பரிசோதனை கட்டணம்: 400–900.

நோக்கங்கள்

  • மண்ணின் ஆரோக்கியம் மற்றும் பயிர் விளைச்சலை மேம்படுத்துதல்.
  • காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய விவசாய முறைகளை  ஊக்குவித்தல்.
  • விவசாயிகளுக்கு அறிவியல் ரீதியான அறிவை எளிதில் கிடைக்கச் செய்தல்.

முக்கியத்துவம்

  • பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது.
  • நிலையான விவசாயத்திற்கு ஆதரவளிக்கிறது.
  • விவசாயத்தில் வறட்சியினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கிறது.

 

வுமேனியா (Womaniya)

  • பின்னணி : ‘வுமேனியா (Womaniya)’ முன்முயற்சியானது, பெண் தொழில்முனைவோர் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் (SHGs) தங்கள் தயாரிப்புகளை இ-சந்தை (‘GeM’) தளம் வாயிலாக நேரடியாக அரசு கொள்முதல் செய்பவர்களிடம் விற்பனை செய்ய வழிவகை செய்கிறது.
  • இது கைவினைப் பொருட்கள், கைத்தறி, சணல், கயிறு பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் அலுவலகத் தளபாடங்கள் போன்ற குறிப்பிட்ட வகை தயாரிப்புகளின் கொள்முதலை உள்ளடக்கியது.

வுமேனியா (Womaniya) முன்முயற்சி பற்றி

    • இது வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் 2019-ஆம் ஆண்டு அரசு இ-சந்தை (GeM) தளத்தில் தொடங்கப்பட்டது.
    • இது பொதுக் கொள்முதலில் பெண்கள் தலைமையிலான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) மற்றும் சுயஉதவிக் குழுக்களின் (SHGs) பங்கேற்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இடைத்தரகர்கள் இன்றி அரசு கொள்முதல் செய்பவர்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய வழிவகை செய்கிறது, இதனால் சந்தை அணுகல் மற்றும் வெளிப்படைத்தன்மை மேம்படுகிறது.
  • கைத்தறி, கைவினைப் பொருட்கள், சணல், கயிறு பொருட்கள், ஜவுளி மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்த பொருட்களை உள்ளடக்கியதுடன், கிராமப்புற பெண் உற்பத்தியாளர்களுக்கும் ஆதரவளிக்கிறது.
  • இது SWAYATT முன்முயற்சியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, இது பெண்கள், இளைஞர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களின்  பங்களிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

2025–26 நிதியாண்டில் (FY 2025–26)

  • 2.1 லட்சத்திற்கும் அதிகமான பெண் MSME-க்கள் GeM-ல் பதிவு செய்துள்ளன. 13.7 லட்சம் ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரசு இ-சந்தை (Government e Marketplace – GeM) 

  • GeM என்பது மத்திய மற்றும் மாநில அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பஞ்சாயத்துகள் மற்றும் கூட்டுறவுகள் ஆகியவற்றின் பொருட்கள் மற்றும் சேவைகளை ஒருங்கிணைத்து கொள்முதல் செய்ய உதவும் இணையதளமாகும்.
  • 2016-ல் “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்” நோக்கில் தொடங்கப்பட்டது.

 

< Previous Current Affairs Next தேசிய திட்டங்கள் >